ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் அழியும் விவசாயம்

ஒரே நாளில் 35,000 பேர் சாப்பிடும் அளவு தின்று தீர்க்கும் அபாயம்..!



பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் உலகையே மிரட்டிக் கொண்டிருக்க சுண்டுவிரல் அளவே உள்ள இந்த வெட்டுக்கிளிகள் கடந்த 10 நாட்களாக ராஜஸ்தான் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டிருக்கின்றன.

மே மாதத் தொடக்கத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் இருந்து எல்லை தாண்டி கூட்டம் கூட்டமாக ராஜஸ்தானுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன வெட்டுக்கிளிகள். முதலில் எல்லையோர மாவட்டங்களுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது உள்மாவட்டங்களிலும் பயிர்களை தின்று தீர்க்கத் தொடங்கிவிட்டன. இலை, பூ, பழம், காய், தண்டு என பயிர்களில் எதையும் இவை விட்டுவைப்பதில்லை.

ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வந்திறங்க முடியும். அவற்றால் ஒருநாளில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை கபளீகரம் செய்ய முடியும் என்பதுதான் மிகவும் ஆபத்தானது… இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட வெடி வெடிப்பது, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்புவது மட்டும்தான் விவசாயிகளின் கையில் இருக்கும் வாய்ப்புகள்.

மற்றொருபுறம் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க அரசு முயற்சித்து வந்தாலும் அது ஓரளவுக்கு மேல் பயன்தரவில்லை. தீயணைப்பு வாகனங்கள் மூலமும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. விரைவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் அதற்காக மத்திய அரசிடம் 84 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது ராஜஸ்தான். ஆனாலும் கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களை தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள் இந்த ஆண்டும் அந்த அளவுக்கு சூறையாடும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.