எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எளிமையாகிவிடுகிறது.

நன்றி jazeela

எங்கள் வீட்டுப் பணிகளில் உதவியாக இருப்பவர் மிக அழகாக இருப்பார். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அவர் வங்காள நாட்டைச் சேர்ந்தவர். இன்று அவரிடம், "உங்களுக்கு எந்த வயதில் திருமணம் முடிந்தது?" என்று பேச்சைத் தொடங்கினேன். தனக்குப் பதிமூன்று வயதிலேயே திருமணம் முடிந்ததாகவும் தங்கள் நாட்டில் இப்படித்தான் பன்னிரெண்டு அல்லது பதிமூன்று வயதிலேயே திருமணம் முடிந்துவிடும் என்றும் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

அவருக்கு ஒரே ஒரு மகன் தான். "மகன் என்ன படிக்கிறார்?" என்று கேட்டேன். "அவன் பத்து வரை மட்டும் படித்துவிட்டு அதற்கு மேல் படிக்க முடியாது என்று சொல்லிவிட்டான். அதனால் அவனை துபாய்க்கு அழைத்துக் கொண்டோம். இல்லாவிட்டால் திருமண வலையில் விழுந்துவிடுவான்" என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தங்கள் நாட்டில் கொஞ்சம் வசதியான பையனைக் கண்டால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அந்தப் பையனைக் கவர்வார்களாம். திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லையென்றால் நஷ்டயீடாக ஏழு எட்டு லட்சம் வாங்கி விட்டுத்தான் விலகுவார்களாம். "உங்க மகனுக்குப் பதினாறு வயதுதானே இருக்கும்?" என்றேன். "ஆம். எங்க ஊரில் அப்படித்தான்" என்றார். "வங்காளத்தில் ஏதேனும் கிராமத்திலா?" என்றேன். "இல்லை டாக்கா நகரத்தில்தான் இப்படி" என்று ஆதங்கப்பட்டார்.

"சரி அவரைப் படிக்க வைத்தால் என்ன?" என்றேன்.

"அவன் படிக்க மறுக்கிறான் படிக்காமல் நானும் அவன் தந்தையும் (அவள் கணவர் ஏசி பழுது பார்ப்பவர்) சம்பாதிப்பதை உதாரணம் காட்டுகிறான்" என்றார். "ஆனால் இது கடினமான வேலை என்று எடுத்துச் சொல்ல கூடாதா?" என்றதற்கு, சிரித்துக் கொண்டே "அவன் தந்தையுடைய சகோதரர் சிவில் என்ஜினியர் எங்களுடன் தான் தங்கியிருக்கிறார். அவர் துபாய் வந்து ஒரு வருடமாகப் போகிறது இன்னும் எந்த வேலையும் கிடைக்கவில்லை, படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம்தானே?" என்றார். "உங்களிடம் என் மகனை அழைத்து வருகிறேன் நீங்கள் வேண்டுமென்றால் பேசிப் பாருங்கள், நாங்கள் தான் வீட்டு வேலை செய்து பிழைக்கிறோம், அவனாவது இப்படிக் கஷ்டப்படாமல் நல்ல வேலைக்குப் போகட்டுமே. ஆனால் என் மகன் சொல்கிறான், 'எப்படியும் யாரும் முதலாளி இல்லையே யாரிடமோ கை நீட்டிச் சம்பளம்தானே வாங்குகிறோம். அலுவலக முதலாளியிடம் வாங்கும் சம்பளத்தை வீட்டு முதலாளியிடம் வாங்கிவிட்டுப் போகிறேன், என்ன வேறுபாடு? அலுவலகமென்றால் சட்ட திட்டங்கள் நேரம் காலமெல்லாம் இருக்கும், இந்த வேலைக்கு அப்படி இல்லையே. நம்மை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள், நாம் போகும் நேரத்திற்குப் போகலாம். நிறைய வீட்டில் வேலை செய்தால் நிறையப் பணம், சில வீட்டில் வேலை செய்தால் குறைந்த பணம் அவ்வளவுதானே?' என்கிறான். என்ன சொல்லிப் புரிய வைக்க?!" என்றார்.

வேலையில் கௌரவம், ஏற்றத் தாழ்வு, மரியாதை, பெரிய வருமானம், வசதி என்று எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எளிமையாகிவிடுகிறது.