பணம் குவிக்கும் மலைவேம்பு

மரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும்.
ரங்களின் பலன்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்போல் நீண்டுகொண்டே போகும். சாதாரண பென்சில் முதல் மிகப்பெரிய கப்பல்களைக் கட்டுவது வரை மரங்களின் பயன், பலன் ஏராளம்... ஏராளம்…
மரம் தானும் வளர்ந்து, தன்னைச் சார்ந்த மனிதன் உள்பட பிற விலங்கினங்களையும் வளர்க்கிறது. கண்களை சற்றே அகலமாக விரித்துப் பார்த்தால், நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான மரப் பயன்கள். குடியிருக்க வீடு கட்ட, வீட்டை அடிகூட்ட, பர்னிச்சர்கள் செய்ய, வேளாண் கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், கைத்தறி நெசவு கருவி, தண்டவாளங்களுக்கு சிலீப்பர் கட்டை, மீன்பிடிப் படகு கட்ட, விளையாட்டுக் கருவிகள் செய்ய, வார்ப்பட அச்சுகள் செய்ய, குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய என மரங்களின் பன்முகப் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில் நவீனகால பயன்பாடான ஒட்டுப்பலகை எனும் பிளைவுட், மிக நீண்டகாலமாக பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும் மின்சாரம் போன்றவையும் உண்டு.
இதுபோன்ற பல்வேறு புதிய தலைமுறை பயன்பாட்டுக்கு கோடிக்கணக்கான மரங்கள் தேவை. இன்றைய காலத்தின் பயன்பாட்டுக்கு இப்போது தப்பிப் பிழைத்து, குறைந்து நிற்கும் வனப்பகுதியை நம்பி வனத்துக்குள் புகுந்தால், வன வளம் நசிந்து சீர்கெட்டு, சூழலியல் சமன்பாடு குலைந்து கடும் பாலையாகிவிடும். அதனால்தான், மரப் பயிரும் பணப்பயிரே என கருதி, மரப்பயிர் சாகுபடியில் உழவர்கள் ஈடுபட வேண்டும். உணவுப் பயிர் விளைவிப்பது மட்டும்தான் வேளாண்மை எனும் காலம் மாறிவிட்டது. வேளாண்மை, மனித இனத்தின் கலாசாரம் என்ற நிலைமை மாறி, வேளாண்மை இலாப நோக்கு உடைய தொழில் எனும் கட்டத்தில் இப்போது நிற்கிறது.
மாறிவரும் பருவகாலம், பருவம் தவறி பெய்யும் பருவ மழை, வேளாண் பணிக்கென போதுமான ஆட்கள் பற்றாக்குறை, குறைந்து வரும் நீர் ஆதாரம், ஏற்ற இறக்கத்தில் ஊசலாடும் வேளாண் விளை பொருள்களின் சந்தை விலை, அரசின் ஆதார விலை எனப்படும் ஆகாத விலை நிலவரம், அரசுகளுக்கு ஏற்றபடி மாறும் ஏற்றுமதிக் கொள்கை, உள்நாட்டு விவசாயிகளை மதிக்காத இறக்குமதிக் கொள்கை, தடையில்லா வர்த்தகம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு கட்டியம் கூறும் கார்ப்பரேட் கலாசாரம்... என பலமுனைத் தாக்குதலால் உயிர் ஊசலாட்டத்தில் இருக்கும் விவசாயி, தப்பிப் பிழைக்க மாற்று வழி மரம் வளர்ப்பு. பெரிய அளவில் அதிக நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது சுற்றுச் சூழலுக்கு உகந்ததுதான். ஆனால், உணவு தானிய உற்பத்தி குறைந்துபோகும், பொருளாதார வளர்ச்சி முடங்கும் என்று கூக்குரல் எழுப்புவோர், பறிப்புக் கூலிகூட கொடுக்க முடியாமல் விளைந்த தக்காளியை வீதியில் கொட்டும் விவசாயிகளின் உள்ளக்குமுறலை ஒருபோதும் அறியமாட்டார்கள்.
மரம் வளர்ப்பதும் மகாத்மாவின் ஒருவகையான ஒத்துழையாமை இயக்கம்தான். மரம் மட்டும் நட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்கவேண்டுமல்லவா? இதற்குத்தான் குறுகிய காலத்தில் பண வருவாய் வழங்கக்கூடிய மரப்பயிர் வகைகள் உள்ளன. Read more
Thanks dinamani.